PUDHIYATHALAIMURAI

SCIENCE & SOCIAL MATERIAL

SURA TET MATERIAL

ENGLISH

Friday, March 29, 2013


டாக்டர்,செவிலியர்,ஆசிரியர்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி.முனுசாமி


                சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் சவுந்திர ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.), ஆறுமுகம் (இந்திய கம்யூ.), என்.ஆர்.ரங்கநாதன் (காங்) ஆகியோர் கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர். அவர்கள் கூறும் போது, தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரித்து வரும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்து நிர்வாக பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்கள். 
          இதற்கு பதில் அளித்து நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:- 

               அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்பும் அமைப்புக்களான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம், வேலை வாய்ப்பகங்கள், தேர்வு குழுக்கள் ஆகியவை மூலம் போட்டி தேர்வு, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் ஒவ்வொரு பதவிக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன முறைகள் மூலம், பதவிகள் நிரப்பப் பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பகம் மூலம் அரசு துறைகளில் 54,420 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. 

             தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,581 பணியிடங்களும் மற்ற கல்லூரிகளில் 64,435 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 16,793 சத்துணவு அமைப் பாளர்கள், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்களும் 11,803 அங்கன் வாடி பணியாளர் பணியிடங்களும் நிரப்பப் பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகங்களில் 16,963 பணியிடங் களும் கூட்டுறவு நியாய விலை கடைகளில் 6,307 பணியிடங்களும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,489 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மற்றும் பல்வேறு அரசு துறை நிறுவனங்களில் 3717 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 

                         மேலும் 22,269 ஆசிரியர் பணியிடங்களும், 1091 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,042 பணியிடங்களும், கூட்டுறவு வங்கிகளில் 3607 பணியிடங்களும், தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 10,105 காலி பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ பணி கழகத்தால் 2,159 மருத்துவர்கள், 4 ஆயிரம் செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. எனவே காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடர்ந்து நடைபெறுவதால் நிர்வாக பணிகள் தொய்வின்றி நடக்கிறது. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் அதிகப்படியான காலி பணியிடங்களை இந்த அரசு நிரப்பி உள்ளது. இதனால் அரசு நிர்வாகமும் சரியாக நடைபெறுகிறது. 

இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

No comments:

Post a Comment